கொரோனா நோய் பரவுவதை தடுக்க 10 முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மந்திரிகளுக்கு மோடி புதிய உத்தரவு
பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி நேற்று மத்திய மந்திரிசபை கூட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தினார். அப்போது பிரதமர் பேசியதாவது:-
கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய மந்திரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் மத்திய மந்திரிகள் தொடர்பில் இருந்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உத்தரவாதம் அளிப்பதுடன் அதிக விலைக்கு பொருட்கள் விற்பவர்கள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும். விவசாயிகளின் பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல வாகன வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த அனைத்து நிவாரண திட்டங்களும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மந்திரியும் ஊரடங்கு முடிந்ததற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய 10 முக்கிய பணிகள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இறக்குமதியை சார்ந்திருக்காமல் இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தொழிற்துறையை மேம்படுத்துவத்து தொடர்பாக மத்திய மந்திரிகள் விரிவான திட்டங்களை வரையறுத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply