பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாட்னா:

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அது ஒரு ஆபத்தான கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி ஓமன் நாட்டில் இருந்து திரும்பி வந்தார். குடும்பத்தினருடன் சகஜமாக பழகியதுடன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம்காட்டி வந்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். உடனே அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அப்போது அதிர்ச்சி தரும் விதமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 28 பேர்களில் பெண்கள், குழந்தைகள் என 22 பேருக்கு கொரோனா வைரஸ் கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞர் மூலம்தான் அது பரவியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

உடனடியாக அந்தக் கிராமம் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கிராம மக்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு கம்பெனி ராணுவப்படையும் அங்கே நிறுத்தப்பட்டு இருக்கிறது. கிராம மக்களின் நடமாட்டம் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிவான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *