கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கை 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி கிடைக்கும் என்றும் அறிவித்து உள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்க் கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதாக இருந்த ஊரடங்கை ஒடிசா, பஞ்சாப், மராட்டியம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து, அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? என்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். உயர் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

மருத்துவர்களை கொண்ட நிபுணர் குழு, மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24-ந் தேதியன்று மாலை 6 மணி முதல் 31-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை ஏப்ரல் 15-ந் தேதி (நாளை) காலை வரை நீட்டித்தது.

ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் கலந்தாய்வு

இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் காணொலி காட்சி மூலமாக 11-ந் தேதியன்று கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்த கலந்தாய்வின் போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். மேலும், 30-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தையும் தெரிவித்தேன்.

நானும், மற்ற மாநில முதல்- மந்திரிகளும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

கட்டுப்பாடுகள் தொடரும்

பிரதமரின் கலந்தாய்வு கூட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11-ந் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

ரேஷன் பொருட்கள்

* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

* கட்டிட தொழிலாளர்கள் உள்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிற மாநில தொழிலாளர்கள்

* பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்துக்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

* பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலான காலத்தில், பேக்கரிகள் இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பேக்கரிகளிலும் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

* மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ‘டெலி மெடிசின் சொசைட்டி ஆப் இந்தியா’ நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களை கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்து உள்ளது.

வீட்டில் இருங்கள்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதுதான் தமிழக அரசுக்கு மிகவும் முக்கியமானது.

எனவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *