கொரோனா எதிரொலியாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

லண்டன்,

கொரோனா வைரசால் இங்கிலாந்து கடுமையாக பாதித்து உள்ளது. அங்கு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டுக்கு கொரோனா பாதித்தவர்களின் காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கிற வகையில் இந்தியா 30 லட்சம் பாரசிட்டமால் மாத்திரைகளை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவில் இத்தகைய மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இது முக்கியமான ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக இங்கிலாந்து நாட்டின் தெற்காசியா மற்றும் காமன்வெல்த் துறை ராஜாங்க மந்திரி தாரிக் அகமது, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த நெருக்கடியான தருணத்தில் இந்தியா, இந்த மாத்திரைகளை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டின் அடையாளம் ஆகும். இங்கிலாந்து அரசின் சார்பில் இந்தியாவுக்கு என் ஆத்மார்த்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

இந்தியா விமானம் மூலம் அனுப்பியுள்ள பாரசிட்டமால் மாத்திரைகளின் முதல் தொகுப்பு இன்று லண்டன் போய்ச்சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *