திருவனந்தபுரம்: வரும் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை – இரட்டைப்படை’ முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஏப்.,20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகளையும் அதற்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு தளர்வு பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனக் கட்டுப்பாடுகளுக்கான புதிய விதிமுறைகளும் பின்பற்றப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 394 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 245 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர். இன்னும் 147 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இது குறித்து பினராயி விஜயன் கூறியதாவது: ஏப்.,20ம் தேதிக்குப் பிறகு மாநிலங்களில் ஓரளவு கட்டுப்பாடுகள் உள்ள மாவட்டங்களில் வாகனங்களுக்கான ஒற்றை-இரட்டைப்படை முறை செயல்படுத்தப்படும். மேலும், பெண்கள் இயக்கும் வாகனங்களுக்கு சலுகை வழங்கப்படும்.

காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு போன்ற அதிகபட்ச கொரோனா வழக்குகள் உள்ள மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முதல் மண்டலமாக மாறும். இந்த மண்டலத்தில், மே 3ம் தேதி வரை எந்தவிதமான தளர்வும் இல்லாமல், ஊரடங்கை கண்டிப்பாக தொடர வேண்டும்.

இரண்டாவது மண்டலத்தில், பதனம்திட்டா, எர்ணாகுளம், கொல்லம் ஆகியவை சேர்க்கப்படும். இந்த இரண்டாவது மண்டலத்தில் ஹாட்ஸ்பாட் பகுதிகள் காணப்பட்டு சீல் வைக்கப்படும்.

அலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மூன்றாவது மண்டலத்தில் பகுதியளவு தளர்வு வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பே இல்லாத கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் நான்காவது மண்டலத்தில் சேர்க்கப்படும். இந்த தளர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *