ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் நோய்த்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இதேபோல நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தால் அது மோசமான நிலைக்கு தள்ளிவிடும்.
கொரோனா நோய் அதிகமாக பரவாமல் தடுக்கவும், பெரிய அளவிலான சமூக தொற்றை தவிர்க்கவும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 14-ந்தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடுமா? அல்லது மேலும் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போதுள்ள நிலவரத்தால் கலக்கம் அடைந்துள்ள பல்வேறு மாநில அரசுகள், நிபுணர்கள், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு தலைவர்களும் இந்த யோசனையை கூறி உள்ளனர். எனவே, ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்காமல், அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் நீட்டிக்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல் மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply