உலகம் முழுவதும் மருத்துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 66 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 737 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயாளிக்கு சிக்கிச்சை அளிக்கும் ஊழியர்கள்

இதற்கிடையில், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர்.

இந்த பணியில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாக பரவிவருகிறது.

போதிய முககவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவுகிறது.

வைரஸ் பரவிய நபர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிக்கிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்கள்

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) நிலவரப்படி உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரொனா பரவுவதாகவும், அதே சமயம் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *