இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றடைந்தன. இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு புகழாரம் சூட்டியது.
லண்டன்:
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது.
இதற்கிடையே, இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. இந்த மாத்திரை பாக்கெட்டுகள், இங்கிலாந்து சென்றடைந்தன.
இதையடுத்து, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் ட்ரஸ், இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினார். அவர் கூறியதாவது:-
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த பாடுபட்ட இந்திய, இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவை முறியடிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம்.
இந்தியா அனுப்பி வைத்த மாத்திரை பாக்கெட்டுகள் விரைவில் இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், சில்லரை மருந்தகங்களுக்கும் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக மந்திரி லார்டு தாரிக் அகமது, கடந்த வாரம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
Leave a Reply