அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் நாளை (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் உள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவி வழங்குவதற்காக ரூ.1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளுடன் சுய உதவிக்குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக இந்த பணம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டுள்ளன.

நெரிசலை தவிர்க்க வேண்டும்

பொங்கல் பண்டிகையின்போது, தெரு வாரியாக தினமும் 200 ரேஷன் அட்டைகள் வீதம் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா நோய் பரவும் அச்சம் இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாத பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.

அதற்கான பட்டியல் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த பட்டியல் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு நிவாரண தொகையும், ரேஷன் பொருளும் வழங்கப்பட இருக்கிறது. தினமும் 100 பேருக்குத்தான் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், கூட்டம் குறைவாகவே வரும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கணித்துள்ளனர். ஆனால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் பொருட்கள் வாங்க வந்தால், அவர்களுக்கு டோக்கன் வழங்கி நேரம் குறிப்பிட்டு, அந்த நேரத்தில் வந்து பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவுறுத்த தயார் நிலையில் உள்ளனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *