இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 14 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்பட சில மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசுக்கு முடிவு கட்டும் மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் கருதப்படுவதால், தற்போது அதற்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் இப்கா ஆய்வகங்கள், சைடஸ் கேடிலா மற்றும் வால்லஸ் பார்மெட்டிக்கல்ஸ் ஆகிய 3 மருந்து கம்பெனிகள் தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இப்கா ஆய்வகங்கள் மற்றும் சைடஸ் கேடிலா ஆகிய மருந்து கம்பெனிகளிடம் 10 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ள மாத்திரைகளை வைத்து பார்த்தால் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page